Wednesday 29 November 2017

தமிழ் இலக்கியம் - ஒரு கால அட்டவணை

தமிழ் இலக்கிய கால அட்டவணை

ஸம்ஸ்கிருத இலக்கிய கால அட்டவணை
குறிப்பு
நீள சதுரம் - மன்னர் வம்சம்
பசுஞ் சதுரம் - புலவரும் அவர் இயற்றிய நூலும்
மஞ்சள் எழுத்து – மன்னர் பெயர்
பச்சை எழுத்து – மன்னர் இயற்றிய நூல்
நீல எழுத்து – புலவர் இயற்றிய நூல்
சாய்ந்த எழுத்து - பெருங்காப்பியம்

தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை சுருக்கமாக மேலோட்டமாக காண இங்கே ஒரு கால அட்டவணை அல்லது வரைபடம் சமர்ப்பிக்கிறேன். மன்னர்காலத்துக்கும் இலக்கியத்திற்கும் ஆழ்ந்த தொடர்புகளுள்ளன. சங்க காலத்தில் குயத்தியரும், பரதவரும், கூலவணிகரும், எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டாலும் தமிழ் மன்றங்கள் அரசவையிலேயே நிகழ்ந்தன போலும். புறத்திணை இலக்கியத்தில் மன்னர்களே முதற்கண் நாயகர்கள். சிலம்பிலும் சீவகசிந்தாமணியிலும் வணிகர் நாயகர்கள். இருபதாம் நூற்றாண்டில்தான் பாமரர்களின் கதைகளும் இலக்கியமானது என்று நினைக்கிறேன்; அவை இலக்கியமாக நிலைக்குமா என்று தெரியவில்லை.

வம்சாவளியால் தமிழக வரலாற்றை பகுக்கும் வழக்கிருக்க, அதன் வழியே கோயில் கட்டுமானத்தையும் சிற்ப ஓவிய பரிணாம மாற்றத்தையும் வரலாற்று ஆய்வாளர் பகுத்து வழங்குகின்றனர். இம்மரபில் சில தமிழ் இலக்கியங்களையும் ஒரு கால அட்டவணையில் பகுத்துள்ளேன்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 26, 2017 அன்று நந்திக்கலம்பகத்தின் சில செய்யுள்களையும் அதன் பாடல்களையும் கிஷோர் மகாதேவன் விளக்கினார். இலக்கியத்தில் பெயர் பெரும் மன்னரகளை பற்றி கல்வெட்டுகளில் குறிப்புகள் சிலவே. கல்வெட்டில் வரும் மன்னவர் பலர் இலக்கியத்தில் காணப்பெறவில்லை. பாரதத்திலும் தமிழ்நாட்டிலும் இவ்வகை வரலாற்று முரண்கள் அதிகம். நந்திகலம்பகம் இதில் ஒரு முக்கிய விதிவிலக்கு. தெள்ளாற்றெறிந்த நந்தி என்ற மெய்கீர்த்தியுடைய மூன்றாம் நந்திவர்மன், இக்கலம்பகத்தின் நாயகன். மல்லையர்கோன் என்றும் மயிலைக்காவலன் என்றும் இதில் அழைக்கப்படுவதும் முன்னோடியில்லாதவை. மாமல்லபுரத்துக்கு தன் பெயரளித்த வாதாபி கொண்ட நரசிம்ம வர்மனோ, அவன் பெயரன் பரமேச்சுரனோ கடற்கரை கோயிலை எழுப்பிய ராஜசிம்மனோ தங்கள் மெய்கீர்த்திகளில் மல்லை நகரை குறிப்பிடவில்லை. மயிலை காவலன் என்று தன்னை இன்றைய சென்னையை அன்றே அரவணைத்தான் நந்தி.

இலக்கியச்சுவை ததும்பும் தமிழ் கவிதைத்தொகைகளில் ரசிகமணி டி.க.சிதம்பரநாத முதலியாரின் ஒரு கட்டுரையில் நந்திகலம்பகமும் உண்டு.

பட்டடக்கல் பிரவேசம் என்றுவந்து வாதாபி, ஐகோளே, பட்டடக்கல், மகாகூடா என நான்கு சாளுக்கிய ஊர்களுக்கு ஜனவரி 2016இல் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை குழுவினர் கலை உலா சென்றோம். அதற்கு முன் வாராவார அறிமுக உரைகளில் ஒன்றாக “நகரேஷு காஞ்சி” என்று பாடிய புலவர் பாரவி இயற்றிய கிரார்தாஜுனீயம் பற்றி என்னுடைய ஓயாத நச்சுறுத்தலுக்கிணங்கி நகுபோலியன் பாலசுப்ரமணியம் அதன் சில பாடல்களை விளக்கி, அதன் இலக்கிய சுவையை பகிர்ந்தார். கிராதார்ஜுனீயம் ஸம்ஸ்கிருத ப்ருஹத்காவியம் என்று அழைக்கப்பெறும். அதாவது பெருங்காப்பியம். காளிதாசன், பாணன், பாசன், ஹர்ஷன், தண்டின், இவர்கள் இயற்றிய நூல்களெல்லாம் லகுகாவியங்கள்தான். அதாவது குறுங்காப்பியங்கள். ஸம்ஸ்கிருதத்தில் மூன்று பெருங்காப்பியங்களே – மாகன் இயற்றிய சிசுபாலவதமும், ஸ்ரீஹர்ஷன் இயற்றிய நைடத சரிதமும் மற்ற இரண்டாம். (சிற்றையம் – ஸ்ரீஹர்ஷன் தற்பவம் விதியால் திருவருடன் என்று மறுவுமோ?) மகேந்திர பல்லவனின் தந்தை சிம்மவிஷ்ணு ஆட்சிகாலத்தில் பாரவி காஞ்சிக்கு வந்தபோது, அந்நகரின் அழகில் சொக்கி “நகரேஷு காஞ்சி” எனறு பாடியதாக வரலாறு. ராஜசிம்மன் காலத்தில் புலவர் தண்டி தசகுமார சரிதம், அவந்திசுந்தரிகதை ஆகிய காவியங்களையும் காவியதரிசனம் என்னும் செய்யுளணி ஆய்வுநூலையும் இயற்றினார். இதை தழுவியே தண்டியலங்காரம் தோன்றியதாய் கருதலாம்; அதை எழுதியவர் அவரே தானா வேறு தண்டியா என்று தெரியவில்லை.

தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுள் சிலப்பதிகாரமும் மணிமேகலைமும் இந்த வடமொழி காப்பியங்களை காலத்தில் முந்தியவை. தமிழ் என்ற மொழியையே கண்டுகொள்ளாத சம்ஸ்கிருத புலவர்கள், ரஷியாவின் ஸ்பட்னிக் ராக்கெட் வெற்றியால் பொறாமை பொங்க நிலவிற்கு ராக்கெட் விட்ட அமெரிக்கர்களை போல், இவ்விரண்டால் தூண்டப்பட்டு பெருங்காப்பியங்கள் எழுதினரோ?

பாரதத்தில் வரலாற்று நூல்களில் என்று தொன்றுதொட்டு தொடர்ந்து வந்த வழக்கம் ஏதுமில்லை. கடந்த இருநூறு ஆண்டுகளில் ஐரோப்பிய ஆய்வாளாரின் முயற்சிகளாலும் இன்றும் தொடரும் ஆராய்ச்சிகளாலும் தமிழகத்து வரலாறும் பாரத வரலாறும் தொகுக்கபெற்றன. ஞானசம்பந்தர் வாழ்ந்தது ஏழாம் நூற்றாண்டிலுருந்து பதிமூன்றாம் நூற்றாண்டுவரை எந்த காலம் என்று மனோன்மணீயம் சுந்தரனார் ஒரு நூல் எழுதினார். அதன் பிறகே உ.வெ.சாமிநாத ஐயர் சங்கநூல்களை பதிப்பிக்க, அந்த அறுநூறு ஆண்டு வரலாறும் வெளிவந்தது.

புது கண்டுபிடிப்புகளால் மேற்கண்ட அரசியல் வரலாறும் இலக்கிய வரலாறும் மாறலாம். மாலவீகாக்னிமித்திரம் என்ற நூல் முதல் நூற்றாண்டில் ஆண்ட சுங்க மன்னன் அக்னிமித்திரனை நாயகனாக கொண்டதாம். அதை இயற்றிய காளிதாசனே சாகுந்தலத்தையும் ரகுவம்சத்தையும் குமாரசம்பவத்தையும் எழுதினானா? இல்லை குப்தர காலத்தில் வாழ்ந்த வேறு காளிதாசனா? அங்கும் குழப்பம்.

குறிப்பு. 2 மே, 2019 அன்று சம்ஸ்கிருத கால வரிசைப்படத்தில் ஒரு சிறு மாற்றம் செதுள்ளேன். ஐந்தாம் நூற்றாண்டில் காட்டிய சாகுந்தலம் எழுதிய காளிதாசரை முதலாம் நூற்றாண்டுக்கு மாற்றியுள்ளேன்; அதுவே சரியான காலம்.
  1. வரலாறு மூவர் மொழி
  2. தேவாரத்தில் பாரி
  3. மயிலாப்பூரில் பல்லவர் இசை 
  4. A Timeline of Sanskrit literature
  5. A timeline of Tamilnadu and Karnataka
  6. A timeline of Tamilnadu and Gujarat
  7. Was Tholkaappiyam inspired by Bharata's Naatya Shaastram?
  8. ஐகோளே கல்வெட்டில் பாரவியும் காளிதாசனும்

Tuesday 7 November 2017

தொண்டை மண்டல காணி ஆட்சி – ஔவை பாடலும் இரட்டைப்புலவர் பாடலும்

பாணியிற்கங்கைநதி மலையினிற்கயிலைமலை  பாரழகினிற்றண்டகம்
பழமொழியிலௌவைசொல் லரசரிற்சேரமான் பத்தியிற்சிறியதொண்டன்
காணியிற்றொண்டையாம் புகழில்வேளாளர்புகழ் கான்முளையினிற்பகீரதன்

இரட்டை புலவர்கள் இயற்றிய ஏகாம்பரேசுவர பதிகம் என்னும் நூலில் இந்த பாடல் இடம்பெறுகிறது. மிராசு  உரிமைகளை கி.பி. 1806ல் பற்றி கிழக்கிந்திய கம்பெனியின் சென்னை ராஜதானி அரசின் பதினேழு கேள்விகளை எழுப்ப, பதிலளித்து ஒரு அறிக்கையை முன்சிரஸ்தாதார் சங்கரய்யன். அதை 1814ல் கலெக்டர் பிரான்ஸிஸ் வைட் எல்லிஸ் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தார் (ரிப்ளை). 1804ல் கர்ணல் பிளாக்பர்ண் எழுதிய ஒரு கட்டுரையும் (ரிப்போர்ட்),1822ல் மதறாஸ் ஆளுனர் தாமஸ் மன்றோ எழுதிய சிற்றறிக்கையும் (மினிட்), எல்லிஸ் எழுதிய அறிக்கையோடு இணைத்து “மிராசி உரிமையின் மூன்று ஆய்வுரைகள்” (Three Treatises on Mirasi Rights) என்ற தலைப்பில், சார்ல்ஸ் பிலிப் பிரௌண் (Philip Brown)1852ல் ஒரே புத்தகமாக தொகுத்து பதிவிட்டார்.

1. எ ரெப்ளை டு த ஃபர்ஸ்ட் செவண்டீன் குவெஸ்டின்ஸ் (A Reply to the First Seventeen Questions)
2. ரிப்போர்ட் ஆன் மிராஸி ரைட் பை மேஜர் பிளாக்பர்ண், ரெசிடண்ட் அட் டாஞ்ஜூர் கோர்ட் (Report on Mirasi Right by Major Blackburn, Resident at Tanjore Court)
3. மினிட் ஆன் மிராஸி ரைட்ஸ் பை கவர்னர் தாமஸ் மன்றோ (Minute on Mirasi Rights by Governor Thomas Munro)

மேலுள்ள பாடலை பதம் பிரிப்போம்.

எல்லிஸ் தன் கட்டுரையோடு சில சோழ, விஜயநகர, ஆங்கிலேய கால தமிழ் தெலுங்கு கன்னட் சம்ஸ்கிருத கல்வெட்டுகளையும், அவற்றின் ஆங்கில மொழிப்பெயர்ப்புகளையும் இணைத்தார். இவ்விணைப்பின் முன்னுரை பத்தியில் இந்த இரட்டைப்புலவர் பாடலை மேற்கோள் காட்டினார். கீழே பதம்  பிரித்துள்ளேன்.

பாணியில் கங்கை நதி மலையினில் கயிலை மலை  பார் அழகினில் தண்டகம்
பழமொழியில் ஔவை சொல் அரசரிற் சேரமான் பத்தியில் சிறிய தொண்டன்
காணியில் தொண்டையாம் புகழில் வேளாளர் புகழ் கால் முளையினில் பகீரதன்

நதிகளில் கங்கையும் மலைகளில் கயிலையும் மற்றவையும் கவிநயம். அதென்ன காணியில் தொண்டை? மிராசு என்பது பாரசீக சொல். இஸ்லாமிய நவாபுகளின் ஆட்சியில் தமிழகத்தில் அன்று வரை நிலவிய காணியாட்சி என்ற சொல்லின் இடத்தை பற்றியது. மிராசு உரிமை என்று தலைப்பிட்டு நூலை அச்சிட்டாலும், சங்கரையனின் பதில்களும் எல்லிஸின் அறிக்கையும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் சட்ட நூல்களும் பேசும் காணி ஆட்சியையே ஆய்ந்து பேசுகின்றன.

ஊரிலேன் காணியில்லைஎன்று தொடங்கும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாசுரமும், “காணிநிலம் வேண்டும்” என்று தொடங்கும் சுப்பிரமணிய பாரதி பாடலும் பலருக்கு தெரியும். தேசம், மண்டலம், கோட்டம், நாடு, ஊர், காணி என்பவை சோழர் காலத்து நிலப்பிறிவுகள். இஸ்லாமியார் ஆட்சியில் ஜில்லா, தாலுகா, ஜமீன் போன்ற சொற்களும் ஆங்கிலேயர் ஆட்சியில் பிரஸிடென்ஸி (ராஜதானி), டிஸ்ட்ரிக்ட் (ஜில்லா), டௌன் (ஊர்), வில்லேஜ்(கிராமம்), முனிசிப்பாலிடி போன்ற சொற்களும் புழங்கின. கிட்டத்தட்ட இச்சொற்களே இன்றும் வழக்குப்பெற்றுள்ளன.

இரட்டைப்புலவரின் உவமைகள்
இரட்டைப்புலவரின் இப்பாடலில் சில விசித்திர சொற்களை காணலாம். கால்முளையில் பகீரதன் என்பர். கால்முளை என்ற சொல் எனக்கு புதிது. சென்னையில் பிறந்து ஆங்கில வழிமுறையில் பள்ளி கல்வி பயின்ற எனக்கும் என்போன்ற பலருக்கும், தமிழில் இன்றும் நிலவும் பல சொல்வழக்கங்கள் பலவும் புதிதே. கால்முளை என்ற சொல் சங்க இலக்கியம் தொட்டு நிலவுகிறது. நற்றிணையில் “விளையாடு ஆயமெனும்” எனத்தொடங்கும் 172வது பாடலிலும்  பதிற்றுப்பத்தில் “எடுத்தேறேய கடிப்புடை அதிரும்” எனத்தொடங்கும் 84வது பாடலிலும் உள்ள சொல். செடிகளின் வம்சாவளியை குறிப்பதை இங்கே பகீரதனுக்கு புகழ் சேர்க்கும் சொல்லாக அமைந்துள்ளது.

பக்தியில் சிறியதொண்டன் என்று நரசிம்ம பல்லவனின் படைத்தளபதியை உவமைக்கு வைத்ததும் சாலத்தகும். ஆனால அரசரில் சேரமான் என்றும் சொல்லாடல். ஏன்? இரட்டைப்புலவர் காலத்தில் சோழர் பாண்டியர் எல்லாம் வீழ்ந்துவிட்டனர். அவர்கள் வரபதியாட்கொண்டார் என்ற சேர மன்னனிடம் பரிசு பெற்றனராம். நன்றியோ?

பார் அழகினில் தண்டகம் என்பதை, தண்டகமே தொண்டைமண்டலம் என்று எல்லீசன் தவறாக மொழிப்பெயர்த்துள்ளார் என்பது என் ஐயம். இது இராமாயணத்தில் வரும் தண்டகாராண்யம் என்று நினைத்திருந்தேன். ஆனால், தொண்டை நாடு இருபத்தி நான்கு கோட்டங்களாகவும், அக்கோட்டங்கள் எழுபத்தி ஒன்பது நாடுகளாகவும் பிரிந்துள்ளதை, அன்றைய காஞ்சி ஞானப்பிரகாச மடத்தில் கிடைத்த தகவலாக எல்லிஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த கோட்டங்களில் ஒன்று எயிற்கோட்டம், அதில் தண்டகம், மாகரல், கோனேரி என மூன்று நாடுகள் அடங்குமாம். ஒருவேளை அந்த தண்டகமோ?

மேலும் திருக்கழுக்குண்ற புராணத்திலிருந்து ஒரு செய்யுளை சுட்டி, அதில் தொண்டை மண்டலத்தை தண்டக வேந்தன் ஆண்டதால் தண்டக நாடு என பெயர்கொண்டதாகவும், பின்னர் சோழ மரபில் தோன்றிய தொண்டைமான் ஆண்டதால் தொண்டை நாடானது எல்லீசன் கூறுகிறான். ஒருவேளை, இதனால் இரட்டைப்புலவர் குறித்த தண்டகம் தொண்டைநாடே எனும் எல்லீசனின் கருத்து சரியாக இருக்கலாம்.


ஔவையின் பாடல் 

ஔவையாரின் இந்த புகழ் வாய்ந்த பாடலை ஆய்வோம்.

வேழம் உடைத்து மலைநாடு மேதக்க
சோழ வள நாடு சோறுடைத்து – பூழியூர்கோன்
தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல் தொண்டை
நன்னாடு சான்றோர் உடைத்து


தெண்ணீர் வயல் தொண்டை நன்னாடு
காவிரியால் சோழ நாடு வளமுற்றது. தொண்டை நாட்டில் பாலாறு ஓடினாலும், மழையில்லா காலத்தில், ஔவை சொன்ன வயல்களுக்கு தெண்ணீர் ஏரிகளிலிருந்தும் குளங்களிலிருந்தும் தாங்கல்களிலிருந்தும் பாய்ந்தது. தொண்டை மண்டலத்து ஒரு வருடத் நீர் தேவைக்கு ஐப்பசி மாதத்தில் பெய்யும் மழையை பெரும்பான்மையாக நம்பவேண்டும். அந்த மழைநீரை சேமிக்க எழுந்த ஏரி குளம் கண்மாய்களின் மகிமையும், அவற்றை அளக்கவும் ஆளவும் கையாண்ட முறைகளும், நிலத்தின் விளைச்சலை அரசும், குடியும் பங்கிடும் சமூக சட்டங்களே காணியாட்சி. பாரதம் முழுதும் காணியாட்சி வெவ்வேறு பெயர்களில் முறைகளில் நடந்தாலும், தொண்டை மண்டலத்து காணி மிகச்சிறந்தது என்று இரட்டை புலவர்கள் கருதியுள்ளனர். அதனால் காணியில் தொண்டை என்று சிறந்த உவமைகளை குவித்து புகழ்ந்துள்ளனர். மன்னரையும் சமயக்குறவரையும் புலவரையும் மட்டுமே பாடும் தமிழகத்தில், புகழில் வேளாளர் புகழ் என்ற வாழ்த்தே அற்புதம். அதி அற்புதமோ?  அவ்வேளாளரின் ஒழுக்கமும் ஒத்துழைப்பும் இன்றி, காணியாட்சி சீராக நடக்க வாய்ப்பில்லை.

தொண்டை மண்டலத்து சான்றோரை புகழ்வதே ஔவையின் சித்தமாயினும், அச்சான்றோரும் அவரை பேணும் சமூகமும் நம்பிய வயல்களை குறிக்காமல் விட ஔவைக்கு மனமில்லை. இரட்டைப்புலவரின் செய்யுளில் பழமொழியில் ஔவைசொல் என்ற கருத்து சாலத்தகும்.

காணியாட்சி – ஆராய்ச்சி களம்
காணியாட்சியை விவரித்த எல்லீசனின் பரிந்துரைகளை சில காலம் ஆங்கிலேயர் ஏற்றாலும், எல்லீசன் மறைந்த பின் மதறாஸ் கவர்னராக பதிவியேற்ற தாமஸ் மன்றோ, காணியாட்சியை அதன் வழிமுறைகளையும் எல்லீசன் தவறாக புரிந்துகொண்டதாக கருதினார். மன்றோவின் கருத்துகள் அவரது சிற்றறிக்கை (மினிட்). இவற்றை நான் படித்து வருகிறேன். மெக்காலேயின் 1835 சிற்றறிக்கையால் (அதுவும் ஒரு மினிட்) இந்திய கல்விமுறையும் சட்டமுறையும் மாறியது போல், மன்றோவின் சிற்றறிக்கையால்  தமிழக காணியாட்சி அபாரமாக மாறியது. இதை யாராவது அராய்ந்துள்ளனரா என்று தெரியவில்லை. சங்கரையனின் அகால மரணமும், எல்லீசனின் அகால மரணமும் தமிழக்த்திற்கும் பாரதத்திற்கும் மாபெரும் இழப்புகள். ஒரு யுகத்தின் முடிவு.

மன்றோவின் பரிந்துரைகளை பற்றியும் காணி முறைகளை பற்றியும் தனியாக ஆராயவேண்டும், எழுதவேண்டும். பரம்பரை வேளாளர் ஆராய்ந்தால் சிறப்பாக இருக்கும். அதிலும் பொருளாதாரமும், இந்திய சட்ட நூல்களும், கற்றவர் செய்யவேண்டும்.

என் கட்டுரைகள்
1.    உழவு
b.    டீஸல் பென்ஸ் செய்த பசுமை புரட்சி 
c.    நார்மன் போர்லாக் – வரப்புயர்த்திய வல்லவன் 
d.    உழவர் தற்கொலை – சுவாமினாதன் ஐயர் கட்டுரை 
e.    வான்மழை பொய்ப்பினும் – சுவாமினாதன் ஐயர் கட்டுரை  
2.    எல்லீசன்
a.    ஒரு ஆங்கிலேயனின் தமிழ் கல்வெட்டு 
c.    எல்லீசனின் தமிழ் சம்ஸ்கிருத கவிதை