Sunday 24 November 2013

சொர்கத்தின் பறவைகள்


டார்வினை பற்றி யாவரும் அறிவோம், ஆனால் அவர் சொன்னை “பரிணாம வளர்ச்சி” கொள்கையை டார்வினுக்கும் முன் வெளியிட்ட ஆல்ஃப்ரெட் ரஸ்ஸல் வாலஸை பற்றி ஒரு சிலரே அறிந்திருப்பர். நவம்பர் 2013 வாலஸ் மறைவின் நூற்றாண்டு. 


இளம் வயதில் வாலஸ்
இக்கட்டுரை அவருக்கு என் அஞ்சலி. என் வலைப்பதிவிற்கு “ஆஜீவிகா வாலஸியன் Ajivika Wallacian” என்று பெயரிட்டுள்ளதை சிலர் கவனித்திருக்கலாம். அந்த வாலஸ் இவர் தான்.

டார்வினை பற்றியும் அவரது அறிவியல் ஆய்வுகளை பற்றியும் நாளிதழிலோ பொது பத்திரிகையிலோ படிக்கும் பொழுது, வாலஸ் பெயர் அடிபடாமல் இருக்கலாம். ஆனால் பரிணாமம் பற்றிய கதை கட்டுரைகளில் வாலஸ் பெயர் நிச்சயம் இருக்கும். டார்வினுக்கு சமமான உயிரியல் மேதை, பல துறைகளில் அவரை மிஞ்சியவர். நாம் அறிவியலை பொதுவாகவே சுவையின்றி ருசியின்றி பாடபுத்தகமாகவே படிக்கிறோம். அக புற பக்தி திணைகளில் உள்ள நவரசங்களும் அறிவியல் துறையில் உள்ளன. அறிவியல் வரலாற்றில் உள்ளன. இவற்றை சினிமா நாடக கலைஞர்களும், நாவலாசிரியர்களும் பரப்பாதது அவர்களின் திறமை குறை, சமுதாயத்தின் பெரும் இழப்பு. ஒரு திணையாக அறிவியலை பற்றி பின்னொரு நாள் எழுதுகிறேன்.

வருமையும் கல்வியும் கலந்த குடும்பத்தில் பிறந்த ஆல்ஃப்ரட், ஏழாம் வகுப்பு படிக்கையில் தந்தை இறந்ததால், அண்ணன் வில்லியமுடன் நில அளவு பணியில் இறங்கினார். இயற்கையில் ஆர்வம் பாய்ந்து செடிகளை சேர்க்கலானார், அவற்றை பற்றி படிக்கலானார். ஹம்போல்ட், டார்வின் ஆகியோரின் தென் அமெரிக்க பயணத்தால் ஆவலுற்று, நான்கு வருடம் தென் அமெரிக்கா சென்று அமேசான் நதியும் அதை சூழ்ந்த காடுமாய் அலைந்து பல இன்னல்கள் சந்தித்து, 1852இல் இங்கிலாந்து திரும்பினார். இதை பற்றி தனியாக எழுதுகிறேன். 


 1854இல் சிங்கப்பூருக்கு வந்து மலே தீவுகளில் உயிரியல் ஆய்வு செய்தார். அன்று இந்தொனேசிய தீவுகளை மலே தீவுகள் என்றே அழைத்தனர். அந்த தலைப்பில் Malay Archipelago என்று ஒரு நூல் எழுதினார் வாலஸ். பாலி தீவிலிருந்து லோம்போக் தீவுக்கு சென்ற வாலஸ் 15 கிலோமீட்டர் அருகே இருந்த இத்தீவுகளில் பறவைகளும் விலங்குகளும் இவ்வளவு வித்தியாசமாய் இருப்பதை கண்டு அதிசயித்தார். படங்களை கண்டால் உங்களுக்கும் அதே உணர்வெழும். 

ஆசிய விலங்குகள் ஒரு சில தீவுகளிலும், ஆஸ்திரேலிய விலங்குகள் மற்ற தீவுகளிலும் இருப்பதை கண்டு, இத்தீவுகளுக்கு இடையே இயற்கையாகவே ஒரு பெரும் பிறிவு உள்ளதாய் கருதி, ஒரு காலத்தில் கடலளவு குறைந்திருந்து சில தீவுகள் ஆசிய கண்டத்துடனும் மற்றவை ஆஸ்திரேலிய கண்டத்துடனும், ராமர் பாலத்தால் பாரதமும் இலங்கையும் இணைந்தது போல், இயற்கை பாலங்களால் இவை இணைந்திருக்க வேண்டும் என்றும் எழுதி, வரைபடத்தில் ஒரு கோடிட்டார். இதற்கு வாலஸ் கோடு என்று தாம்ஸ் ஹக்ஸ்லி பெயரிட்டார்.

சூலவேசி, போர்ணியோ, டெர்ணாட்டி தீவுகளுக்கு சென்று இந்த அற்புதத்தை பற்றி கட்டுரைகள் எழுதி இங்கிலாந்திற்கு அனுப்பினார்.

இத்தீவுகளில் அலையும் காலத்தில் சொர்கத்தின் பறவைகள் எனும் Birds of Paradise கண்டார். பரிணாம வளர்ச்சி தத்துவத்தை பற்றி On the Tendency of Varieties to depart indefinitely from the Original Type” என்ற தலைப்பில் எழுதி, டார்வினுக்கு அனுப்பினார். இருபது வருடங்களாக இதை ஆய்வு செய்திருந்த டார்வின், தம்மை ஒருவர் முந்தி, தான் அச்சிட தயங்கிய கருத்தை இவ்வளவு ரத்தின சுருக்கமாய் கட்டுரை எழுதியள்ளதை கண்டு, மனம் இடிந்து போனார். இப்படி நடக்கலாம் என்று அஞ்சி டார்வினை இரண்டு வருடங்களுக்கு முன்னரே அவர் நண்பரும் குருவும் ஆன புவியியல் மேதை சார்ல் லயல் அவருக்கு எச்சரித்திருந்தார். தம் உழைப்பு அடையாளற்று போய்விடும் என்று ஒரு புறம் மனமுடைந்தும், ஆனால் வாலஸின் கட்டுரையை பிரசுரிப்பதே நேர்மையான செயல் என்று மறுபுறம் உணர்ந்தும், லயலிடமும், மற்றொரு நண்பர் ஜோஸஃப் ஹூக்கரிடும் லோசனை கேட்டு கெஞ்சினார் டார்வின். உங்கள் இருவர் பெயரிலும் சேர்ந்து ஒரு கட்டுரையை வெளியிடலாம் என்ற அவர்களின் சிந்தனையை, பண்பற்றது என்று முதலில் டார்வின் நிராகரித்தார். அந்த நேரத்தில் டார்வினின் மகன் சார்ல்ஸ் நோய்வாய் பட்டு உயிருக்கு ஊசலாடவே வாழ்விலும் ஆய்விலும் ஆர்வமிழந்த டார்வின் நண்பர்களிடம் பொருப்பை ஒப்படைத்து ஒதுங்கிகொண்டார். மகன் சார்ல்ஸ் இறந்துவிட்டான். இரண்டு மாத கப்பல் பயணத்து தொலைவில் இருந்த, புகழ்பெறாத,  வாலஸிடம் கேட்காமல், லயலும் ஹுக்கரும் பரிணாம வளர்ச்சி என்ற கொள்கையை உலகம் அறிய டார்வின் வாலஸ் இருவர் பெயரிலும் ஜூலை 1858இல் லின்னேயன் சபையில்  ஒரு கட்டுரையை படித்தனர்.

வாலஸ் எத்தகைய மாமனிதர் என்று இதன் பிறகே வெளிப்பட்டது. தன்னை ஏமாற்றியதாக கருதாமல், தன் புகழை டார்வினுக்கு அவர் நண்பர்கள் திருடி அளித்ததாக நினைக்காமல், “தக்கது நீர் செய்தீர் தர்மத்திற்கு இது ஒக்கும்” சூதின்றி வஞ்சமின்றி என்று லயலையும் ஹூக்கரையும் மனமளாவ பாராட்டினார்! டார்வினின் இருபதாண்டு உழைப்புக்கு களங்கம் வராமல், என் கட்டுரை அச்சில் முந்திய ஒரே காரணத்தால் அவருக்கு வரவேண்டிய புகழ் எனக்கு மட்டும் தனியாக வந்திருக்குமாயின், ஒரு மாபெரும் வரலாற்று பிழையும் அநீதியும் நடந்திருக்கும் என்று, அவர்களது செயலை மெச்சினார். பிற்காலத்தில், டார்வினுடன் பல கருத்துக்களில் வேறுபட்டாலும், “டார்வினிஸம்” என்ற பெயரில் டார்வினை விட மிக எளிமையாகவும் சிறப்பாகவும் விளக்கும் ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.

வீரர். ஞானி. மேதை. மகாத்மா. சான்றோர்.

இக்கட்டுரைக்கு உதவிய நூல் Darwin’s Armada by Iain McCalman. இணையத்தில் நான் பார்த்த, ஆர்வலர் பார்க்கவேண்டிய காணொளிகள்:

1.   Wallace in the Spice Islands - பறவை விலங்கு படங்கள் இதிலிருந்து எடுத்தவை 

No comments:

Post a Comment